சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்
ஏழாம் திருமுறை
7.52 திருவாலங்காடு
பண் - பழம்பஞ்சுரம்
முத்தா முத்தி தரவல்ல
    முகிழ்மென் முலையா ளுமைபங்கா
சித்தா சித்தித் திறங்காட்டுஞ்
    சிவவே தேவர் சிங்கமே
பத்தா பத்தர் பலர்போற்றும்
    பரமா பழைய னூர்மேய
அத்தா ஆலங் காடாவுன்
    அடியார்க் கடியேன் ஆவேனே.
1
பொய்யே செய்து புறம்புறமே
    திரிவேன் றன்னைப் போகாமே
மெய்யே வந்திங் கெனையாண்ட
    மெய்யா மெய்யர் மெய்ப்பொருளே
பையா டரவம் அரைக்கசைத்த
    பரமா பழைய னூர்மேய
ஐயா ஆலங் காடாவுன்
    அடியார்க் கடியேன் ஆவேனே.
2
துண்டா விளக்கின் நற்சோதீ
    தொழுவார் தங்கள் துயர்தீர்ப்பாய்
பூண்டாய் எலும்பைப் புரமூன்றும்
    பொடியாச் செற்ற புண்ணியனே
பாண்டாழ் வினைக ளவைதீர்க்கும்
    பரமா பழைய னூர்மேய
ஆண்டா ஆலங் காடாவுன்
    அடியார்க் கடியேன் ஆவேனே.
3
மறிநேர் ஒண்கண் மடநல்லார்
    வலையிற் பட்டு மதிமயங்கி
அறிவே அழிந்தே னையாநான்
    மையார் கண்ட முடையானே
பறியா வினைக ளவைதீர்க்கும்
    பரமா பழைய னூர்மேய
அறிவே ஆலங் காடாவுன்
    அடியார்க் கடியேன் ஆவேனே.
4
வேலங் காடு தடங்கண்ணார்
    வலையுட் பட்டுன் நெறிமறந்து
மாலங் காடி மறந்தொழிந்தேன்
    மணியே முத்தே மரகதமே
பாலங் காடி நெய்யாடி
    படர்புன் சடையாய் பழையனூர்
ஆலங் காடா உன்னுடைய
    அடியார்க் கடியேன் ஆவேனே.
5
எண்ணார் தங்கள் எயிலெய்த
    எந்தாய் எந்தை பெருமானே
கண்ணாண் உலகங் காக்கின்ற
    கருத்தா திருத்த லாகாதாய்
பண்ணா ரிசைக ளவைகொண்டு
    பலரும் ஏத்தும் பழையனூர்
அண்ணா ஆலங் காடாவுன்
    அடியார்க் கடியேன் ஆவேனே.
6
வண்டார் குழலி உமைநங்கை
    பங்கா கங்கை மணவாளா
விண்டார் புரங்க ளெரிசெய்த
    விடையாய் வேத நெறியானே
பண்டாழ் வினைகள் பலதீர்க்கும்
    பரமா பழைய னூர்மேய
அண்ணா ஆலங் காடாவுன்
    அடியார்க் கடியேன் ஆவேனே.
7
பேழ்வா யரவி னணையானும்
    பெரிய மலர்மே லுறைவானுந்
தாழா துன்றன் சரண்பணியத்
    தழலாய் நின்ற தத்துவனே
பாழாம் வினைக ளவைதீர்க்கும்
    பரமா பழையனூர் தன்னை
ஆள்வாய் ஆலங் காடாவுன்
    அடியார்க் கடியேன் ஆவேனே.
8
எம்மான் எந்தை மூத்தப்பன்
    ஏழேழ் படிகால் எமையாண்ட
பெம்மான் ஈமப் புறங்காட்டிற்
    பேயோ டாடல் புரிவானே
பன்மா மலர்க ளவைகொண்டு
    பலரும் ஏத்தும் பழையனூர்
அம்மா ஆலங் காடாவுன்
    அடியார்க் கடியேன் ஆவேனே.
9
பத்தர் சித்தர் பலரேத்தும்
    பரமன் பழைய னூர்மேய
அத்தன் ஆலங் காடன்றன்
    அடிமைத் திறமே அன்பாகிச்
சித்தர் சித்தம் வைத்தபுகழ்ச்
    சிறுவன் ஊரன் ஒண்டமிழ்கள்
பத்தும் பாடி ஆடுவார்
    பரமன் அடியே பணிவாரே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com